×

புதிய செயலி மூலம் வாகன புகை பரிசோதனை சான்று

நாமக்கல், மே 5: நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல், புதிய செயலி மூலம் வாகன புகை பரிசோதனை சான்று வழங்கப்படும் என ஆர்டிஓ தெரிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில், வாகனப் புகை அதிகரிப்பால், காற்று மாசுபாடும், பொதுமக்களுக்கு நுரையீரல் தொடர்பான பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, தமிழகத்தில் 534 வாகன புகை பரிசோதனை மையங்கள், அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலரின் அனுமதி பெற்று இயங்கி வருகிறது. சில மையங்களில் வாகனங்களை கொண்டு வராமல் பரிசோதித்தும், அங்கீகாரம் பெற்ற நபரிடம் சான்று பெறாமலும், சான்று வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சமீபத்தில், தமிழகம் முழுவதும் உள்ள வாகனப்புகை பரிசோதனை மையங்களில், துணைப் போக்குவரத்து ஆணையர்கள், இணை ஆணையர்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், திடீர் சோதனை செய்தனர்.

சோதனையின் போது, 50 மையங்களில் பல்வேறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட சோதனை செய்ய வேண்டிய நபர் இன்றி, வேறு நபர்கள் பணியில் இருந்ததும், உரிமம் வழங்கப்பட்ட இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இயங்கியதும், சிசிடிவி கேமரா பொருத்தப்படாதது, உரிமம் புதுப்பிக்காமல் இயங்கியது போன்றவை தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அம்மையங்களை மேம்படுத்தவும், புகாரை தவிர்க்க தொழில்நுட்பங்கள் உருவாக்கி, பியுசிசி 2.0 வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வாகன புகை பரிசோதனை மையங்களில், லைசென்ஸ் பெற்றுள்ளவர்களின் தனிப்பட்ட செல்போன் எண் பயன்படுத்தப்படும். அதில், இந்த புதிய செயலி நிறுவப்பட்டு ஜி.பி.எஸ்., வசதியுடன் இயங்கும். அந்த செயலி உள்ள செல்போன், வாகன பரிசோதனை மையத்தில் இருந்து 30 மீட்டருக்குள் மட்டுமே செயல்படும். வாகன புகை பரிசோதனையின் போது, 2 புகைப்படங்கள் எடுக்கப்படும். அதில் வாகன பதிவு எண், மையத்தின் பெயர் பலகையுடன் முழு தோற்றம், அங்கீகரிக்கப்பட்ட சோதனையாளர் போன்றவை படத்தில் இடம் பெறுவார்கள். விதிமுறைகள் முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே, புகை பரிசோதனை சான்று பதிவிறக்கம் செய்யவோ, பிரிண்ட் எடுக்கவோ முடியும். ஜி.பி.எஸ். கருவியால், வாகனம் இருக்கும் இடம் கண்டறியப்படுவதால், வாகனம் கொண்டு வராமல், புகை பரிசோதனை செய்ய முடியாது.

இந்த நடைமுறை நாளை (6ம்தேதி) முதல், தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. இப்புதிய முறையான பியுசிசி 2.0 வெர்சன் செயலியை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புகை பரிசோதனை மைய உரிமதாரர்கள், அந்தந்த பகுதி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பெற வேண்டும். நாளை முதல் இந்த செயலி மூலமாக மட்டுமே, வாகன புகை பரிசோதனை செய்ய வேண்டும். இதில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், புகை பரிசோதனை மையங்களுக்கு சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செயலி குறித்து, வாகன புகை பரிசோதனை நிலைய உரிமையாளர்களுக்கு, மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் நடத்தி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உரிய அறிவுரை வழங்கியுள்ளனர்.

The post புதிய செயலி மூலம் வாகன புகை பரிசோதனை சான்று appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal district ,RTO ,Chennai ,
× RELATED நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை!